இசையைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும் அவ்வளவு எளிதில் சொல்லி முடித்துவிட முடியுமா என்ன! மனித குலத்திற்கு கிடைத்த பெரு வரமன்றோ இசை.. அதற்குத்தான் எத்தனை பரிமாணங்கள்! அந்த வகையில் புண்ணியம் செய்தது தான் தமிழ்த் திரை இசை.. காலம் நல்ல இசை படைப்பாளர்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டே தான் இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் வயதில் சிறியவராக இருந்தாலும் கீர்த்தியில் பெரியவர் அல்லவா! (ஆஸ்காரையும் தாண்டி..) அவரது எத்தனையோ மயக்கும் பாடல்களில் ஒன்று 'மயிலிறகே, மயிலிறகே' என்ற மனம் வருடும் பாடல்... ஆனால் நான் சொல்ல வந்தது பாடலைப் பற்றி அல்ல, அந்தப் பாடல் படமாக்கப் பட்டிருக்கும் விதத்தைப் பற்றி..மிக மோசமாகப் படமாக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று அதுவாக இருக்கலாம்..எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பும், நடனமும் (?) இனிமையான ஒரு பாடலை சின்னாப்பின்னமாக்கி இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
நன்கு படமாக்கப்பட்ட பாடல்கள்..என்றால் எத்தனையோ பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர். பாடல்கள் மனதில் ஓடுகின்றன.. வாத்தியார் நடித்த 'புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக,' என்ற பாடல் ஒரு மழைக் காட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இனிமையாக.. சிவாஜி நடித்த 'காணா இன்பம் கனிந்ததேனோ' என்ற பாடலும் மெல்லிய சாரலில் கவித்துவமாக படமாக்கப்பட்டிருக்கும்...சமீப காலத்தில், யுவன் இசை அமைத்த 'அடடா அடடா அட மழை டா' பாடலும் ரசனையோடு படமாக்கப்பட்ட பாடல்! (நீங்க உருப்பட மாட்டீங்க..என்று முணுமுணுக்கிறார் என் மனைவி!)
***